விழுப்புரம்: விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி திருக்கோவிலூர் அருகே முகையூர் பகுதியில் பறக்கும் படையை கண்டதும் ரூ.2 லட்சத்து 25 லட்சம் ரூபாய் பணத்தை காரில் போட்டுவிட்டு சிலர் தப்பி ஓடினர். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் அடுத்த முகையூர் பகுதியில் நேற்று இரவு தேர்தலுக்காக பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அப்பகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜவஹர் தலைமையில் அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்த பகுதியில் பொலிரோ காரில் வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததை தேர்தல் பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக காரில் இருந்தவர்கள் பணத்தை போட்டுவிட்டு, காரையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர். காரை சோதனை செய்ததில் காரில் இருந்த ரூ.2.25 லட்சம் பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பியோடிய நபர்கள் குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.