நீலகிரி: முதுமலை வனப்பகுதி சாலையில் காட்டு யானை வாகனங்களை ஆக்ரோஷமாக துரத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு மசினகுடி சாலையில் மழை பெய்ததன் காரணமாக பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் உணவு தேடிவரும் யானைகள் அப்பகுதியில் சுற்றி திரிகின்றன.
அந்த வகையில் சாலையோரத்தில் புற்களை மேய்ந்து கொண்டிருந்த காட்டு யானை ஒன்று திடீரென அவ்வழியாக வந்த வாகனங்களை துரத்தியது. சுற்றுலாப்பயணிகள் தங்கள் வாகனங்களை பின்னோக்கி எடுத்து தப்பித்தனர். யானை மீண்டும் மூங்கில்களை உடைத்து சாப்பிட்டு பின்பு வனப்பகுதிக்குள் சென்றது. வனவிலங்குகள் மேய்ச்சலில் ஈடுபடும் போது வாகனங்களை நிறுத்தி புகைப்பட வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.