புதுச்சேரி : புதுச்சேரி முதலியார்பேட்டை திருவிக நகரை சேர்ந்தவர் கருநேந்திரன் மனைவி ரஞ்சினி. இவருக்கு பாரதிதாசன் நகரில் வசிக்கும் சத்தியா, செந்தில்குமார் ஆகியோர் குழு லோன் ரூ.1.70 லட்சம் வாங்கித் தருவதாக கூறி, 22 பவுன் நகை, ஸ்கூட்டர், 2 செல்போன், ரூ.1.45 லட்சம் பணம் ஆகியவற்றை வாங்கியுள்ளனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும். பிறகு குழு லோன் வாங்கித் தராமல் இவர் கொடுத்த பணம் மற்றும் பொருட்களை ஏமாற்றி விட்டனர்.
இதுகுறித்து ரஞ்சினி, முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சத்தியா, செந்தில்குமார் ஆகிய 2 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், அலாவுதீன் தலைமையிலான குழு சத்தியா வீட்டுக்கு சென்றது. அப்போது வீட்டில் இருந்து தப்ப முயன்ற சத்தியாவை போலீசார் பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்தனர்.
இதுகுறித்து சத்தியா அளித்த வாக்குமூலத்தில், ரஞ்சினியிடம் குழு லோன் வாங்கித்தருவதாக ஏமாற்றி பணம், பொருட்களை வாங்கியதை ஒப்புக்கொண்டார். மேலும் தனது கணவர் தனியார் கம்பெனியில் வேலை செய்வதால் அவருடைய வருமானம் போதவில்லை. ஆகையால் இந்த பணம், பொருட்கள் அனைத்தையும் தனது சொந்த தேவைக்கு பயன்படுத்திக் கொண்டதாக தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.