சென்னை : உலக புகழ் பெற்ற மூத்த மிருதங்க கலைஞரான காரைக்குடி மணி காலமானார். அவருக்கு வயது 77. கர்நாடக இசை உலகில் கடந்த 50 ஆண்டுகாலமாக மிருதங்க கலைஞராக கோலோச்சிய காரைக்குடி மணி உடல்நலக்குறைவால் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். காரைக்குடி மணி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, டி.கே. பட்டம்மாள், மதுரை சோமு தொடங்கி இன்றைய சஞ்சய் சுப்ரமணியன், டி.எம்.கிருஷ்ணா வரை பல தலைமுறை கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியவர் ஆவார்.
1963ம் ஆண்டிலேயே தனது 18 வயதில் குடியரசு தலைவர் விருதை பெற்றவர்.1998ம் ஆண்டு மதிப்புமிக்க சங்கீத நாடக அகாடமி விருதை பெற்றார். கடந்த 40 ஆண்டுகளில் எண்ணற்ற மாணவர்களை உருவாக்கியவர். காரைக்குடி மணி திருமணம் செய்து கொள்ளாமல் தனது வாழ்நாள் முழுவதையும் இசைத்துறைக்கு அர்ப்பணித்தவர். அவரது இறுதி சடங்குகள் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று நடைபெறுகிறது.