பெங்களூர்: தேசிய அளவில் நூற்றுக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் 9வது இரவு நேர வீரும் மோட்டார் பந்தயம் நவ.24ம் தேதி முதல் நவ.26ம் தேதி வரை ஓசூரில் நடைபெற உள்ளது. இது குறித்து வீரும் மோட்டார் விளையாட்டு நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் தாரிக் மோசின் கூறியதாவது: இந்திய மோட்டார் விளையாட்டு மன்றங்களின் கூட்டமைப்பு(எப்எம்எஸ்சிஐ) அங்கீகாரம் பெற்ற வீரும் மோட்டார் பந்தயம் இதுவரை 8 தொடர்களை நடத்தியுள்ளது. நாட்டின் பிரபலமான மோட்டர் விளையாட்டான வீரும் பந்தயத் தொடர் முதலில் பெங்களூரில் 2006ம் ஆண்டு தொடங்கியது.
இடையில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகள் நடைபெறவில்லை. இதன் 9வது தொடர் இம்மாதம் 24, 25, 26 தேதிகளில் தமிழ் நாட்டின் ஓசூரில் உள்ள தனேஜா ஏரோஸ்பேஸ் ஏவியேஷன் அரங்கில் இரவு நேர பந்தயமாக நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து பிரபல வீரர் ஜோயல் ஜோசப், தர்ஷன் சாசலு, நிஹில் பாடீல், ஜூபைர் அலி, முகமது ரியாஸ், உட்பட சுமார் 700 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
அதில் 400 பேர் கார் பந்தயத்திலும், 252பேர் மோட்டார் சைக்கிள் பந்தயத்திலும் கலந்துக் கொள்கின்றனர். அனைவரும் 18வயதுக்கு மேற்பட்டவர்கள் இவற்றில் பலரின் 4, 2 சக்கர வாகனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை, கூடவே தரங்கூட்டப்பட்டவை. இரவு நேர பந்தயமாக நடைபெறும் இந்தப் போட்டியில் எப்எம்எஸ்சிஐ-ன் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் கடைபிடிக்கப்படும். கூடவே பார்வையாளர்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.