Saturday, May 4, 2024
Home » பிளாஸ்டிக் கவரால் முகத்தை கட்டி விஷவாயு சுவாசித்து தாய், மகன் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது: தர்மபுரி அருகே பரபரப்பு

பிளாஸ்டிக் கவரால் முகத்தை கட்டி விஷவாயு சுவாசித்து தாய், மகன் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது: தர்மபுரி அருகே பரபரப்பு

by Francis

தர்மபுரி: தர்மபுரி அருகே தொழில் செய்ததில் நண்பர்கள் ரூ.25 லட்சத்தை ஏமாற்றியதால் இன்ஜினியரிங் பட்டதாரி வாலிபர், தாயுடன் பிளாஸ்டிக் கவரால் முகத்தை கட்டி அறையில் விஷவாயுவை சுவாசித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாலிபர் எழுதி வைத்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி அருகே உள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (65). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சாந்தி (50). இவர்களது ஒரே மகன் விஜய் ஆனந்த் (30). இன்ஜினியரிங் முடித்து சொந்தமாக தொழில் செய்து வந்த இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்தநிலையில் பழனிவேல் நேற்று உறவினர் வீட்டின் திருமண நிகழ்ச்சிக்காக பாலக்கோடு சென்றுவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் மின்விளக்கு எரிந்துகொண்டிருந்தது. பழனிவேல் நீண்டநேரம் கதவை தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மனைவி சாந்தி மற்றும் மகன் விஜய்ஆனந்த் முகத்தில் பிளாஸ்டிக் கவர்களை கட்டிக்கொண்டு நைட்ரஜன் ஆக்சைடு சிலிண்டரில் இருந்து டியூப் மூலம் விஷவாயு காற்றை சுவாசித்து இறந்து கிடந்தனர். இதனை கண்டு அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் இதுபற்றி அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு தர்மபுரி டிஎஸ்பி செந்தில்குமார், அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். வீட்டில் சோதனை நடத்தியதில் விஜய் ஆனந்த் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஜவுளி தொழில் செய்து வந்தேன். அதற்காக 25லட்சம் ரூபாய் கொடுத்திருந்தேன். ஆனால் நண்பர்கள் என்னை ஏமாற்றியதோடு, நான் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் பல்வேறு முறைகளில் மன உளைச்சலை ஏற்படுத்தினர். இதுபற்றி காவல்துறை அதிகாரிகள் விரைவாக தீர்வு காணவேண்டும் என உங்கள் பாதங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன் என எழுதப்பட்டிருந்தது. மேலும் இந்த அறை முழுவதும் விஷவாயு உள்ளது. உடனடியாக ஜன்னலை உடைத்துவிட்டு போலீசை அழைத்து வாருங்கள் என பேப்பரில் எழுதி ஜன்னலில் ஒட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடிதத்தில் தன்னை ஏமாற்றியதாக 2பேரின் பெயர்களை விஜய் ஆனந்த் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi