கொல்கத்தா: “ஒற்றை மதத்தை பரப்ப பாஜ முயற்சிக்கிறது” என பொருளாதார நிபுணர் அமர்தியா சென் குற்றம்சாட்டி உள்ளார்.
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற அமர்தியா சென் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி:
இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் குடிமகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன். ஆனால் தேசத்தின் ஜனநாயக மரபை மேம்படுத்த கடினமாக உழைக்க வேண்டி உள்ளது. பரவலான கல்வி அறிவின்மை, பாலின சமத்துவமின்மை போன்றவை நாட்டில் ஏழைகள் முன்னேறுவதை தடுக்கின்றன. ஆனால் இந்தியாவின் ஆளும் கட்சி பணக்காரர்களின் நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை தருகிறது.
இந்திய அரசியலமைப்பை மாற்ற பாஜ முயற்சி செய்கிறது. இது அரசாங்கத்துடன் இணைவதை தவிர வேறு எதற்கும் உதவாது. நாடு முழுவதும் ஒற்றை மதத்தை பரப்பவே அரசியலமைப்பை மாற்ற பாஜ திட்டமிடுகிறது. இதனால் சாமானிய மக்களுக்கு எந்த பலனும் இல்லை. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றை பாஜ செய்கிறது. இந்து அடையாளங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது இந்துக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இந்தியாவின் மதசார்பற்ற தன்மைக்கு செய்யும் துரோகம்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் பல்வேறு விஷயங்களில் ஒற்றுமை இல்லை. இதுதான் பாஜவை எதிர்கொள்வதில் இந்தியா கூட்டணி கட்சிக்கு முக்கிய பிரச்னையாக உள்ளது. ஒற்றுமை இருந்தால் பலம் இன்னும் அதிகரிக்கும். காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரச்னைகள் அது சரி செய்ய வேண்டும். அதன் கடந்த காலம் காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் உத்வேகம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.