Thursday, May 23, 2024
Home » ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் சிக்கிய வழக்கில் 10 நாட்கள் அவகாசம் கேட்டு நயினார் நாகேந்திரன் கடிதம்

ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் சிக்கிய வழக்கில் 10 நாட்கள் அவகாசம் கேட்டு நயினார் நாகேந்திரன் கடிதம்

by Mahaprabhu

சென்னை: தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் சிக்கிய வழக்கில், நேரில் ஆஜராக 10 நாள் அவகாசம் கேட்டு நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். சென்னையில் இருந்து நெல்லைக்கு கடந்த 6ம்தேதி இரவு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன், வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் எடுத்து செல்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை, தேர்தல் பறக்கும் படையினர், தாம்பரம் ரயில்வே போலீசார், தாம்பரம் போலீசாரின் உதவியுடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, எஸ்7 கோச் பெட்டியில் இருந்து 3 பேரிடம் 6 பைகளில் இருந்த ரூ.4 கோடியை போலீசார் பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில் கொளத்தூர், திருவிக நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (33), அவரது தம்பி நவீன் (31), வைகுண்டம் பெருமாள் (25) என்பதும், சதீஷ் மற்றும் அவரது தம்பி நவீன் இருவரும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கம் பகுதியில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்ததும், பெருமாள் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும், சதீஷிடம் பாஜ உறுப்பினர் அட்டை இருந்ததும், 3 பேரும் பணத்தை திருநெல்வேலிக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இந்த பணத்தை தாம்பரம் வட்டாட்சியர் நடராஜனிடம் ஒப்படைத்து, அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டது. இதனையடுத்து, தாம்பரம் போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து 20 நாட்களுக்கு தினமும் காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி, 3 பேரும் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் சதீஷ் 6 வருடங்களாக மேலாளராக வேலை செய்ததும், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி, முருகன், கோவர்தனன் ஆகியோர் கொடுக்கும் பணத்தை தங்களிடம் கொண்டு வந்து கொடுக்கும்படி நாகேந்திரன் கூறியதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நயினார் நாகேந்திரனுக்கு, தாம்பரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவர் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் ஆசைதம்பி, முருகன், சென்னை அபிராமிபுரத்தை சேர்ந்த பாஜ மாநிலதொழில்துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், தாம்பரம் பாஜ நிர்வாகியும், கட்டுமான நிறுவன உரிமையாளருமான ஜெய்சங்கர் ஆகியோரும், பணத்தை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 8 பேரும் ஒரு வாரத்திற்குள் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 22ம்தேதி நேரில் விசாரணைக்கு தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனது வழக்கறிஞர் மூலம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தன்னால் ஆஜராக முடியவில்லை எனவும், தான் ஆஜராக 10 நாள் அவகாசம் வேண்டும் எனக்கேட்டு வழக்கறிஞர் ஜெயகர் டேவிட் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் ஜெயகர் டேவிட், வக்கீல் பால் கனகராஜின் ஜூனியர் எனவும் இந்த வழக்கை பால்கனகராஜ் தான் நயினார் நாகேந்திரனுக்காக வாதாட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

19 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi