கோவை: கோவையில் மோடி வருகையால் பாதுகாப்பு கெடுபிடி காரணமாக முறிந்த கையுடன் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அழுதுகொண்டே பெண் ஒருவர் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி கோவை சாய்பாபா கோவில் அருகே நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி காலை முதல் மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ்கூட செல்ல முடியாமல் கடும் சிரமம் ஏற்பட்டது. இதற்கிடையே மோடி வருவதற்கு சற்று முன்பு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு முறிந்த கையுடன் பெண் ஒருவரை உறவினர்கள் அழைத்து வந்தனர்.
ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டதால் அந்த பெண்ணால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. இதனால் முறிந்த கையுடன் வலியால் அழுதபடியே அந்த பெண் சிறிது தூரம் சுற்றி நடந்து மருத்துவமனைக்கு சென்றார். பிரதமர் மோடி வருகையால் முறிந்த கையுடன் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அழுது கொண்டே சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.