சென்னை: மோடியின் கனவு தமிழகத்தில் நிச்சயம் நிறைவேறாது என கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை
திருச்சியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றும் போது வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள தமிழக மக்களுக்கு துணை நிற்போம் என்று உறுதி வழங்கியிருக்கிறார். கடந்த டிசம்பர் 3ம் தேதி சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும், 17, 18 தேதிகளில் தென் மாவட்டங்களில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு வெள்ள சேதத்தை பேரிடராக அறிவித்து தமிழகத்திற்கு நிதி வழங்க வேண்டுமென்று பிரதமர் மோடி அவர்களை நேரிலும், நேற்றைய கூட்டத்திலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார்.
ஆனால், தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து நிதி ஒதுக்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் பதில் கூறியதை எவரும் மறந்திட இயலாது. வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய குழு வருகை புரிந்து அறிக்கை தாக்கல் செய்ததோடு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்து இதுவரை தமிழகத்திற்கு நிவாரண நிதியாக எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பிரதமரின் பேச்சை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை.
பிரதமர் மோடி தமது சாதுர்யமான மேடை பேச்சின் மூலம் மக்கள் எதிர்கொண்டு வரும் துன்பங்களையும், துயரங்களையும் திசைத் திருப்பி அரசியல் ஆதாயம் தேடி விடலாம் என்று பகல் கனவு காண்கிறார். அவரது கனவு தமிழகத்தில் நிறைவேறாது.