புதுடெல்லி: கச்சத்தீவு விவகாரம் தொடர்பான ஆவணங்களை தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. இதை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிடுகையில், 1974ல் கச்சத்தீவு இந்திரா காந்தியால் இலங்கைக்கு தரப்பட்டது என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் கூறியிருப்பதாவது:
கடந்த 2015 வங்கதேசத்தின் மோடி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்தியாவின் 111 பகுதிகள் அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டன. வங்கதேசத்துடனான ஒப்பந்தம் இருநாட்டு மக்களின் இதயங்களை இணைக்கும் என்று அப்போது மோடி கூறினார். இதேபோன்ற நட்பு ரீதியான ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் கடந்த 1974ல் இலங்கைக்கு கச்சத்தீவு தரப்பட்டது.ஆனால், கச்சத்தீவு இலங்கைக்கு தரப்பட்டதை மட்டும் மோடி விமர்சிப்பது ஏன்?
இலங்கையுடன் போரிட்டுதான் கச்சத்தீவை மீட்க முடியும் என்று உங்கள் அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோதஜி கடந்த 2014ல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க நீங்கள் என்ன செய்தீர்கள்? இது வரை இந்த பிரச்னையில் உறங்கிக் கொண்டிருந்தீர்களா? மக்களவை தேர்தலில் தோல்வி ஏற்படும் என்ற பயம் காரணமாக இப்போது பிரதமர் மோடி பிரச்னை கிளப்புகிறார்.
கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நம்முடைய ராணுவ வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் கொன்று குவித்தது. ஆனால், சீனா இந்தியாவின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கவில்லை என்று எதிரி நாட்டுக்கு மோடி நற்சான்றிதழ் கொடுத்தது ஏன்? காந்தி, நேரு, படேல், இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் உயிரை கொடுத்தவர்கள். எதற்கெடுத்தாலும் காங்கிரசை குறை கூறுவதை நிறுத்துங்கள். உங்கள் தவறான நடவடிக்கையில் இந்தியா பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.