டெல்லி : “நீங்கள் ஜனநாயகத்தை கொலை செய்கிறீர்கள் என மக்களுக்கு தெரியும்” என்று பாஜக அரசு மீது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். டெல்லி நோக்கி செல்லும் ‘டெல்லி செலோ’ பேரணி புதன்கிழமை மீண்டும் தொடங்கியது. பஞ்சாப் – ஹரியானா எல்லையில் போராட்டம் மேற்கொண்ட விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி ஹரியானா போலீஸ் தடுத்து நிறுத்தினர். ஷம்பு – கனவுரியில் தடுப்புகளை விவசாயிகள் மீற முற்பட்டப்போது ஹரியானா போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, ரப்பர் குண்டு தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
இதனை கண்டித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டால், அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது கிடையாது. முன்னாள் ஆளுநர் உண்மையை கூறினால், அவரின் வீட்டிற்கு சி.பி.ஐயை அனுப்புவது. எதிக்கட்சியினரின் வங்கிக்கணக்கை முடக்குவது. 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணைய சேவைகளை தடை செய்வது, சமூகவலைதளங்களில் உண்மைக் குரல்களை நசுக்குவது. இதுதான் உங்களின் ஜனநாயகமா? மோடி அவர்களே..! நீங்கள் ஜனநாயகத்தை கொலை செய்கிறீர்கள் என மக்களுக்கு தெரியும். அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.