மும்பை: 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜ தோல்வியடைய பிரதமர் மோடியே காரணமாக இருப்பார் என்று சிவசேனா(உத்தவ் தாக்கரே) அணி தெரிவித்துள்ளது. சிவசேனா(உத்தவ் தாக்கரே) அணியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’வில் வௌியாகியுள்ள தலையங்கத்தில், “கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ தோல்வியடைந்தது 2024 மக்களவை தேர்தலுக்கான ஒரு கெட்ட சகுனம். மத்தியபிரதேசத்தில் நடைபெறவுள்ள தேர்தலிலும் பாஜ தோல்வி அடையும். 2024 மக்களவை தேர்தலில் பாஜ நிச்சயம் தோல்வியை சந்திக்கும். அதற்கு பிரதமர் மோடியே காரணமாக இருப்பார். அமைச்சர் அமித் ஷா அதற்கு உறுதுணையாக இருப்பார். மோடி , அமித் ஷா மீது அனைவரும் கோபத்தில் உள்ளனர்.
பாஜவை தோற்கடிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். பிரதமர் மோடிக்கு இணையான தலைவராக ராகுல் காந்தி இருக்க முடியாது என்ற மாயையில் இருந்து அனைவரும் வௌியே வர வேண்டும். ராகுல் காந்தி தனக்கு பெரிய சவாலாக இருப்பதாக மோடியே தற்போது உணர ஆரம்பித்துள்ளார். பாஜவுக்கு எதிராக தற்போது ஒன்று சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் இப்போதுள்ள ஒற்றுமை உணர்வுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தாங்கள் தான் பிரதமர் வேட்பாளராக வர வேண்டும் என்று நினைக்காமல், ஈகோவை விட்டு தற்போதுள்ள நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்தால் 2024 மக்களவை தேர்தலில் பாஜவை நிச்சயம் வீழ்த்த முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.