மதுரை: ‘தமிழக மக்கள் மீது மோடிக்கு அக்கறை இருந்தால் நிதி கொடுத்திருப்பார். ஐபிஎல் போல அதிமுகவில் அதிகளவு அணிகள் உள்ளன’ என்று தென் மாவட்ட பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தலைவர்கள் பிரசாரத்தில் இறங்கி உள்ள நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது பிரசாரத்தை தொடங்கினார்.
தென்மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, காரியாபட்டி, திருமங்கலம், உசிலம்பட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை 6 மணியளவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டு காலமாக மதவாத கட்சியான ஒன்றிய பாஜ அரசு தமிழகத்துக்கு என்ன செய்தது? தேர்தல் வந்தால் மட்டுமே பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, இன்று வரை எந்த வேலையும் நடக்கவில்லை. தூத்துக்குடியில் புயல் தாக்கியது, சென்னையை மழை புரட்டி போட்டது. இந்த புயல் பாதிப்புகளை சமாளிக்க ஒன்றிய அரசிடம் நிவாரணம் கேட்டோம்.
ஆனால் இன்று வரை அவர்கள் நிவாரணம் கொடுக்கவில்லை. தமிழக மக்கள் மீது பிரதமர் மோடிக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால் புயலால், மழையால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தபோது நிவாரணம் கொடுத்திருப்பார். தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரிப்பணம் கொடுத்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசோ கொடுத்தது வெறும் ரூ.1.50 லட்சம் கோடி தான். இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் மோடியா அல்லது மு.க.ஸ்டாலினா என்று நிரூபிக்க ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, அருப்புக்கோட்டை நாடார் சிவன் கோவில் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விருதுநகர் தொகுதி காங். வேட்பாளரை ஆதரித்து பேசியதாவது: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிகப்பெரிய புயல் வந்தது. இதற்கு இழப்பீடாக தமிழக முதல்வர் ரூ.37 ஆயிரம் கோடி கேட்டார். ஆனால் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாங்கள் என்ன ஏடிஎம் மிஷினா என்று கேட்டார். அதற்கு நான், உங்கள் அப்பன் வீட்டு காசா என்று கேட்டேன். ஆனால் அதற்கு நான் மரியாதை இல்லாமல் பேசுகிறேன் என கூறினார்கள்.
நான் ஒன்றிய நிதியமைச்சர் கேட்ட மரியாதையை கொடுத்து விட்டேன். ஆனால் ஒன்றிய நிதியமைச்சர் கொடுக்க வேண்டிய நிதியை ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. தற்போது ஐபிஎல் மேட்ச் நடந்து கொண்டிருக்கிறது. ஐபிஎல்லில் நிறைய டீம்கள் உள்ளது. அதே போல் தான் அதிமுகவில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, தீபா அணி தீபாவின் கார் டிரைவர் அணி, மோடி அணி என பல அணிகள் உள்ளன.
இவர்கள் தேர்தல் வந்தால் மட்டும் நாடகமாடுவார்கள். பாஜ ஆட்சியில் அடகு வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றால் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றியடைய வேண்டும். வருகிற ஜூன் 3ம் தேதி கலைஞரின் நூறாவது பிறந்த நாள், அந்த விழாவின் பரிசாக ஜூன் 4ம் தேதி எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி வெற்றி அடைந்து கலைஞரின் பிறந்தநாள் பரிசாக நீங்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.