திருவனந்தபுரம்: பாலக்காட்டில் நேற்று நடந்த ரோடு ஷோவில் பிரதமர் மோடியுடன் வாகனத்தில் செல்வதற்கு மலப்புரம் தொகுதி பாஜ வேட்பாளர் அப்துல் சலாமுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி கேரள மாநிலம் பாலக்காட்டில் நேற்று ரோடு ஷோ நடத்தினார். பாலக்காட்டில் அவருடன் பொன்னானி மலப்புரம் மற்றும் பாலக்காடு தொகுதிகளை சேர்ந்த பாஜ கூட்டணி வேட்பாளர்களும் திறந்த வாகனத்தில் செல்வார்கள் என கருதப்பட்டது. இதற்காக அவர்களது பெயர்களும் முன்கூட்டியே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் மலப்புரம் தொகுதி வேட்பாளர் அப்துல் சலாமுக்கு மோடியின் வாகனத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது. மோடியுடன் பாலக்காடு மற்றும் பொன்னானி வேட்பாளர்களும், மாநிலத் தலைவர் சுரேந்திரனும் மட்டுமே வாகனத்தில் சென்றனர்.
இந்த சம்பவம் கேரளாவில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் இந்த நடவடிக்கைக்கு கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மத சிறுபான்மையினரை மோடி எவ்வாறு நடத்துகிறார் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் பிரதமரின் வாகனத்தில் பாதுகாவலர்கள் தவிர 4 பேர் மட்டுமே செல்ல முடியும் என்பதால்தான் மலப்புரம் வேட்பாளர் அப்துல் சலாமுக்கு அதில் ஏற முடியாமல் போனது என்று பாஜ சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான அப்துல் சலாம் கடந்த 2019ல் பாஜவில் இணைந்தார். பாஜ வெளியிட்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.