புதுடெல்லி: அடுத்த 100 நாட்களுக்கான செயல்திட்ட அறிக்கையை அனைத்து ஒன்றிய அமைச்சர்களும் வரும் 3ம் தேதி நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் மக்களவை தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு பதவியேற்க உள்ளது. இதனால் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வர உள்ளன. இந்நிலையில் தேர்தல் காரணமாக அரசுப் பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அடுத்த 100 நாள் செயல்திட்டத்தை தயாரிக்க கடந்த 21ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். இந்நிலையில், வரும் 3ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. இதுவே இந்த அரசின் கடைசி அமைச்சரவை கூட்டமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதில், 100 நாள் செயல்திட்டத்தை சமர்ப்பிக்குமாறு பிரதமர் மோடி அனைத்து அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டுள்ளனர். புதிய அரசு பதவியேற்கும் வரை என்னென்ன பணிகள் செய்யப்பட வேண்டும், அடுத்த 5 ஆண்டு காலத்திற்கான அமைச்சகங்களின் இலக்குகள் போன்றவற்றை உயர் அதிகாரிகள், களப்பணி அதிகாரிகள், துறை வல்லுநர்கள் ஆலோசனையுடன் செயல்திட்டம் தயாரிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.