ஹூப்பள்ளி: மஜதவுடன் பாஜ தலைவர்கள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து ஹூப்பள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, ’தேசிய அளவில் வலுவான எதிர்க்கட்சி எதுவும் இல்லை. அதனால் மாநில கட்சிகள் இணைந்து கூட்டம் நடத்துகின்றன. அரசியல் ரீதியாக பார்க்கையில் அதில் எந்தவித அர்த்தமும் இல்லை. மோடியை வீழ்த்துவதைத் தவிர எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடுவதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை. எதிர்க்கட்சிகள் இன்னும் பல கூட்டங்கள் போடுவார்கள். ஆனால், அதனால் எந்த பலனும் இருக்கப்போவது இல்லை.’ என்று பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
மோடியை வீழ்த்துவது தான், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதன் ஒற்றை நோக்கம் என்பதை எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் பலமுறை உரக்க சொல்லி வருகின்றன. அப்படியிருக்கும் போது, இதை என்னவோ தானே கண்டுபிடித்திருப்பதை போல பசவராஜ் பொம்மை பேசியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர். பாஜ – மஜத கூட்டணி குறித்து பேசிய பசவராஜ் பொம்மை, ’மஜதவுடனான கூட்டணி குறித்து எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் அக்கட்சி தலைவர் எச்.டி.தேவகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தை முடிந்த பின் தான், அடுத்தகட்ட உறுதியான முடிவுகள் தெரியவரும். கூட்டணி குறித்து எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள்’ என்று பொம்மை தெரிவித்தார்.