காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், ஜமீன் தண்டலத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியை பிபிஜி ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் மூலம், பள்ளியில் வண்ணமயமாக உருவாக்குவதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் வேலாயுதம், பள்ளி தலைமை ஆசிரியர் குமார், ஏசியன் பெயிண்ட் மேலாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பிபிஜிஏசியன் பெயிண்ட்ஸ் முதன்மை செயல் அலுவலர் ஜிதேந்திரா கால்ரா கலந்துகொண்டு, அரசு மேல்நிலைப்பள்ளியினை வண்ணமயமாக்கும் பணியினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். முதுநிலை பொதுமேலாளர் கிஷோர் சார்ஜ், முதன்மை நிதி அலுவலர் ராஜூ விமல் சஞ்சீவ் கரன், ‘‘ஹேண்ட் இன் ஹேண்ட்” இந்தியா நிறுவனத்தின் பார்ட்னர்ஷிப் அண்ட் அலையன்ஸ் தலைவர் சந்திப் முகர்ஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, மாணவ – மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
பள்ளியில் உள்ள சுற்றுச்சுவர், வகுப்பறைகள், கட்டிட தாழ்வாரங்கள் ஆகிய பகுதிகளில் வண்ணமயான படங்களை வரைந்து காட்சிப்படுத்தினர். மேலும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பல்வேறு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை தலைவர்கள் லோகேஷ் குமார் கணபதி, பிரேம் ஆனந்த் உதவி பொதுமேலாளர் மோகனவேல், மேலாளர்கள் கிருபாகரன் ஸ்டிவ், சதீஷ்குமார், ரீகன் மற்றும் குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் களப்பணியாளர்கள் செய்திருந்தனர்.