சென்னை: தமிழ் வளர்ச்சி (ம) செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கள்ளக்குறிச்சியில் உள்ள திருக்கோவிலூரில் நிறுவப்பட்டுள்ள கபிலர் நினைவுத் தூண், தமிழ்ப் பல்கலைக்கழகக் புதிய கட்டடங்கள் கல்வெட்டு, உலகத் தமிழாரய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பழந்தமிழர் இலக்கியங்களின் ஒலி நூல்கள் மற்றும் கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புவெளி நூல்களை வெளியிட்டு அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் 25 விருதுகளோடு மொத்தம் ரூ.5,22,77,000 மதிப்புக்கான தொகைகளை வழங்கி சிறப்பித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இன்று 07.03.2024 சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா கருத்தரங்க கூடத்தில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில், கள்ளக்குறிச்சியில் உள்ள திருக்கோவிலூரில் நிறுவப்பட்டுள்ள கபிலர் நினைவுத் தூண், தமிழ்ப் பல்கலைக்கழகக் புதிய கட்டடங்கள் கல்வெட்டு, உலகத் தமிழாரய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பழந்தமிழர் இலக்கியங்களின் ஒலி நூல்கள் மற்றும் கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புவெளி நூல்களை வெளியிட்டு அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் 25 விருதுகளோடு மொத்தம் ரூ.5,22,77,000 மதிப்புக்கான தொகைகளை வழங்கி சிறப்பித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தமிழ் வளர்ச்சித் துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயற்படுத்தி அரசுக்குப் பெருமை சேர்த்து வருகிறார். அவ்வகையில் பின்வரும் நிகழ்ச்சிகள் சான்றாகும். 18.07.2023ஆம் நாளன்று சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் 2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கப்பட்டது. 31.10.2023ஆம் நாளன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அவர்களின் அலுவலக அறையில் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது 4 ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது. 19.12.2023ஆம் நாளன்று மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு நேர்வாக 44 தமிழறிஞர்களுக்கு ரூ.10,000க்கான காசோலை வழங்கப்பட்டது. 12.01.2024ஆம் நாளன்று அயலகத் தமிழர் நாளில் சென்னை வர்த்தக மையத்தில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டிற்கான உலகத் தமிழ்ச்சங்க விருதுகள் வழங்கப்பட்டன. 01.02.2024ஆம் நாளன்று திருப்பூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு நேர்வாக 116 தமிழறிஞர்களுக்கு ரூ.10,000க்கான காசோலை வழங்கப்பட்டது.
03.02.2024ஆம் நாளன்று விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக் கல்வி கலையரங்கத்தில் நடைபெற்ற திருக்குறள் மாணவர் மாநாட்டில் திருக்குறள் முற்றோதல் செய்த பள்ளி மாணாக்கர்கள் 31 பேருக்கு குறள் பரிசுத்தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.15,000க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் அரசாணை ஆகியவை வழங்கப்பட்டன. 12.02.2024ஆம் நாளன்று, சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழறிஞர்கள் ஐவரின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டமைக்கு அவர்களின் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத்தொகை வழங்கப்பட்டது. 14.02.2024ஆம் நாளன்று சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டிற்குத் தெரிவு செய்யப்பெற்ற நூல்களின் நூலாசிரியர் மற்றும் பதிப்பகத்தாருக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. 22.02.2024ஆம் நாளன்று சென்னை, அடையாறில் உள்ள முத்தமிழ்ப் பேரவை அரங்கில் 2022ஆம் ஆண்டிற்கான 38 தமிழ்ச்செம்மல் விருதுகள், 10 சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருதுகள் உட்பட 63 விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேற்கூறிய 9 நிகழ்வுகளோடு இன்று 07.03.2024 சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக சங்கப் பெரும் புலவர் கபிலர் நினைவாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ரூ.13.24 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள நினைவு தூணையும் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ரூ.5,03,57,000 (ரூபாய் ஐந்து கோடியே மூன்று இலட்சத்து ஐம்பத்தேழாயிரம் மட்டும்) மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாமன்னன் இராசராசச் சோழன் பன்னோக்குக் கூடம், உள்விளையாட்டு அரங்கம், கூடுதல் மகளிர் விடுதி, பழைய ஆடவர் விடுதி முதல் தளம் ஆகிய நான்கு கட்டடங்கள் மற்றும் ‘குறளோவியம்’ என்ற பெயரில் ஒலி-ஒளிப் பதிவுக்கூடம் ஆகியவற்றின் கல்வெட்டுகளைத் திறந்து வைத்தார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வாயிலாக, பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் மற்றும் சிறார் இலக்கியங்கள் ஒலி நூல்களாக வெளியிடுதல் திட்டத்தின் கீழ் அகத்திணை, புறத்திணை, அறஇலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், சிறுகதைகள், கவிதைகள், புதுக்கவிதைகள், நாடகம் மற்றும் சிறார் இலக்கியங்கள் ஆகிய தலைப்புகளில் நூல்கள் தெரிவுசெய்யப்பட்டு (ரூ.10,00,000) ரூபாய் பத்து இலட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட ஒலி நூல்கள் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2023 செப்டம்பர்த் திங்கள் 20ஆம் நாள் அன்று நடைபெற்ற கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு தொடக்க விழாவில் அறிவித்த அறிவிப்பினை செயற்படுத்தும் பொருட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் 35 தமிழறிஞர்களிடமிருந்து கவிஞர் தமிழ்ஒளி தொடர்பான கட்டுரைகள் பெறப்பட்டு ‘கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புவெளி’ எனும் தலைப்பில் அணியமாக்கப்பட்ட நூல் ஆகியவற்றை வெளியிட்டார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வாயிலாக, 2023ஆம் ஆண்டிற்கான தேவநேயப் பாவாணர் விருதுக்கு தெரிவு செய்யப்பெற்ற விருதாளர் ப. அருளி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து விருதுத் தொகை ரூ.2,00,000, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டிற்கான வீரமாமுனிவர் விருதுக்கு தெரிவு செய்யப்பெற்ற விருதாளர் முனைவர் ச. சச்சிதானந்தம் அவர்களுக்கு விருதுத் தொகை ரூ.2,00,000, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டிற்கான நற்றமிழ்ப் பாவலர் விருதுக்கு மரபுக் கவிதை வகைப்பாட்டில் தெரிவு செய்யப்பெற்ற அரிமாப் பாமகன் அவர்களுக்கும் புதுக் கவிதை வகைப்பாட்டில் தெரிவு செய்யப்பெற்ற கௌதமன் நீல்ராசு அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து ரொக்கப் பரிசு ரூ.50,000 மற்றும் ரூ.25,000 மதிப்பிலான தங்கப் பதக்கம், கேடயம், தகுதியுரை ஆகியவை வழங்கிச் சிறப்பித்தார். 2023ஆம் ஆண்டிற்கான நற்றமிழ்ப் பாவலர் விருதுக்கு தெரிவு செய்யப்பெற்ற செல்வி ப. பவித்ரா (அரியலூர்), நந்திவரம் பா. சம்பத்குமார் (செங்கல்பட்டு), பி. தமிழழகன் (சென்னை), நா. நாகராஜ் (தருமபுரி), செல்வன் செ. மோகனபூபதி (திண்டுக்கல்), சிவசங்கரன் (ஈரோடு), ந. ஸ்டாலின் (கரூர்), செல்வன் ச. ஜாஹீர் உசேன் (மதுரை), ம.அ. சையத் அசன் (எ) பாரிதாசன் (இராணிப்பேட்டை), செல்வி கு. சுமித்ரா (சிவகங்கை), ச. பெத்தையா (தஞ்சாவூர்), ப. பாண்டியராசன் (தேனி), செல்வன் சா. செல்வகுமார் (திருப்பத்தூர்), முத்து. சுப்பிரமணியன் (திருப்பூர்), முனைவர் ப. இராசசேகர் (திருவள்ளுர்), செல்வி அ. அபிபெல்வியா (திருவண்ணாமலை), செல்வன் தே. தன்ராஜ் (திருச்சிராப்பள்ளி), த. இராம்குமார் (தூத்துக்குடி), முனைவர் பா. சம்பத்குமார் (வேலூர்), செல்வன் ஐ. தமிழன் (விழுப்புரம்), செல்வன் க. சதீஸ்குமார் (விருதுநகர்) ஆகிய 21 அறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் பொன்னாடை அணிவித்து ரொக்கப்பரிசு ரூ.20,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆக மொத்தம் 25 அறிஞர்களுக்கு (ரூ.9,20,000) ஒன்பது இலட்சத்து இருபதாயிரம் மதிப்பிற்கான தொகையை வழங்கிச் சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (பொ.) ஸ்டாலின் கோபிநாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.