சென்னை: வீட்டுமனை பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த குழு ஆராய்ந்து அனைவருக்கும் உறுதியாக பட்டா வழங்கப்படும் என திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறினார். பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தேர்தலை முன்னிட்டு தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் வாக்கு சேகரித்தார். தொகுதி முழுவதும் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வீடு வீடாகவும், வீதி வீதியாகவும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார். ‘உங்கள் வீட்டு பெண்ணாக வந்துள்ளேன்’ என்ற அவரது அதிரடி பிரசாரம் தொகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வரும் தமிழச்சி தங்கப்பாண்யடின், தற்போது நவீன தொழில்நுட்பங்களையும் பிரச்சாரத்தில் பயன்படுத்த தொடங்கி உள்ளார். இந்நிலையில், சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட ஈக்காட்டுதாங்கல் பகுதிகளில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் தென்சென்னை நாடாளுமன்றத் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக சென்ற உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டனர். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்து மலர் தூவியும், ஆங்காங்கே ஆரத்தி எடுத்தனர். திறந்த வாகனத்தில் வாக்கு சேரித்த நிலையில் சில பகுதிகளில் வீடு, வீடாக வாக்கு சேகரித்தார். அந்த பகுதிகளில் வழிநெடுகிலும் மலர் மாலைகளை அணிவித்து, மலர்தூவியும் வரவேற்பு அளித்தனர்.
அப்போது பொது மக்கள் வீட்டுமனை பட்டா பெற்றுத்தருமாறு கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்து வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் கூறியதாவது : நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்து அமைச்சர்கள் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைத்துள்ளார். விரைவில் அந்த குழு ஆராய்ந்து அனைவருக்கும் உறுதியாக பட்டா வழங்கப்படும். திமுக அரசின் போர்க்கால நடவடிகைக்கள் மூலமே சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் உடனடியாக சீரமைக்கப்பட்டு, மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடிந்தது. மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது தமிழகத்துக்கு வருகை புரியாக பிரதமர் மோடி கோடைக்காலத்தில் மட்டும் தமிழகத்திற்கு தொடர்ந்து வருகை தருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.