Wednesday, May 15, 2024
Home » பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடி வகித்த உயர்கல்வித்துறையை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல்..!!

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடி வகித்த உயர்கல்வித்துறையை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல்..!!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியின் துறைகளை ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவித்தது. அதன்படி, இந்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

மேல்முறையீடு செய்ய ஏதுவாக பொன்முடி, அவரது மனைவியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை பொன்முடி இழந்தார். இதனிடையே, பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறையை ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார்.

இந்நிலையில், ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியாகியுள்ளது. அதன்படி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததை அடுத்து அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வி, அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ராஜகண்ணப்பனிடம் இருந்த கதர் – கிராமத்தொழில் துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அமைச்சர் காந்தி, தற்போது கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

You may also like

Leave a Comment

1 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi