புதுடெல்லி: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ கிளிப் கடந்த ஏப்ரல் 19ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் பிரணேஷ் ராஜமாணிக்கம் என்பவரது தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், ‘‘அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ விவகாரத்தில் சிபி.ஐ விசாரணை அமைத்து விரிவாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிறப்பித்த உத்தரவில்,”அரசியல் காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தாதீர்கள். கிரிமினல் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று இருக்கும் போது உச்ச நீதிமன்றத்தை அரசியலுக்கான தளமாக பயன்படுத்தக் கூடாது என மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்த தலைமை நீதிபதி, அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.