சென்னை: பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நாங்குநேரி ரூபி மனோகரன் (காங்கிரஸ்) : ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திலும், தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்: ராணுவத்தில் ஆட்கள் சேர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய 3 மண்டலங்கலாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நாங்குநேரி தொகுதியானது, திருச்சி மண்டலத்திற்குட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. கடந்த 2022 முதல் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட அக்னிபாத் திட்ட இந்த ஆட்சேர்ப்பு முறை இணையதளம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த முறையில் யார் தேர்ச்சி பெறுகிறார்களோ, அவர்களுக்கு உடற்தகுதித் தேர்வு, அதனைத் தொடர்ந்து மருத்துவத் தேர்வு என்ற புதிய வழிமுறை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. விகிதாசார அடிப்படையில், தமிழ்நாட்டிலிருந்து அதிக இளைஞர்களை ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும் என்கிற அடிப்படையில், இணையதளம் மூலமாக நடத்தப்படுகின்ற எழுத்துத் தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவிலான இளைஞர்கள் பங்கேற்கின்ற வகையில், அதற்கான புதிய திட்டத்தை முதல்வருடன் கலந்தாலோசித்து, அனுமதியைப் பெற்று, அதிக அளவிலான இளைஞர்கள் இராணுவத்தில் சேருவதற்கான நடவடிக்கைகளான உரிய முயற்சிகள் எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.