ஆண்டிபட்டி: நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தில் தேனியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று 8 கி.மீ. தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்டார். இதில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.71 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்க விழாவிற்கு வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று காலை, ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தின் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
தேனி அருகே அரண்மனைப்புதூர் பகுதியில் துவங்கிய இந்த நடைப்பயிற்சி கொடுவிலார்பட்டி, அய்யனார்புரம், கோட்டைப்பட்டி வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக நிறைவு பெற்றது. மொத்தம் 8 கி.மீ. தூரம் அமைச்சர் மா.சுப்ரமணியன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அமைச்சருடன் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன், கலெக்டர் ஷஜீவனா, எஸ்.பி.பிரவீன் உமேஷ் டோங்ரே உள்பட பல்வேறு அரசு துறை அலுவலர்கள், ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.