திருவேங்கடம்: தென்காசி பிரசாரத்துக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படையினர் 2 முறை சோதனை செய்தனர். தென்காசி, தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். தென்காசி மாவட்டம் குருவிகுளம் கரட்டுமலை சோதனைச் சாவடியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சங்கரன்கோவிலில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த காரை மறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இதேபோல் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் விலக்கு பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை நிறுத்தி சோதனையிட்டனர். இந்த 2 இடங்களிலும் நடந்த சோதனையில் எந்த ஒரு பொருளோ பணமோ சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.