சென்னை : ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் சென்னை புழல் மத்திய சிறை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, அவரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
கடந்த முறை வழக்கு விசாரணையின் போது, சிறையில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜி எம்.பி மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 15ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.மேலும், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் ஏற்கனவே ஜாமீன் கோரியிருந்த நிலையில், வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோர முடியாது. ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டார். மேலும், அடுத்த விசாரணைக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், காணொளி மூலம் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார்.முறையீட்டை கேட்டுக் கொண்ட நீதிபதி அல்லி பரிசீலிப்பதாக தெரிவித்தார்.