சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று கொண்டு வந்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ரூ.10 கோடியில் மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.7.65 கோடி மதிப்பீட்டில் 3டி பிளாட் பேனல் டிஎஸ்ஏ கருவி பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது மாரடைப்பிற்கான அறிகுறிகளை கண்டறிவது, சிடி ஸ்கேன் எடுப்பது, ஸ்டன்ட் பொருத்துவது, ஆஞ்சியோ செய்வது, அறுவை சிகிச்சை செய்வது போன்ற வசதிகளுடன் கூடிய கருவி அமைக்கப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு தென்னிந்தியாவிலேயே எந்தவொரு அரசு மருத்துவமனையிலும் இல்லாத கருவி.
மேலும் பல் சிகிக்சைகளுக்கு சிஎஸ்ஆர் நிதியுதவியுடன் கோன் பீம் சிடி கருவி ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஒரே நேரத்தில் 640 வகையான ரத்த மாதிரி பரிசோதனைகளை செய்யக்கூடிய வகையிலான ஆய்வக கருவி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நவீன பல் மருத்துவ உபகரணங்களும் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.