சென்னை: தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான திருவண்ணாமலை, கரூர், கோவை, சென்னை பகுதிகளில் உள்ள வீடுகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ கல்லூரி, உறவினர்களின் வீடுகளில் கடந்த 3ம் தேதி அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், பிரபல கட்டுமான நிறுவனமான ‘காசா கிரண்ட்’ அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்களுக்கு மார்பிள் கற்கள் மொத்தமாக வழங்கும் நிறுவனங்கள் என தமிழ்நாடு முழுவதும் 80 இடங்களில் கடந்த 3ம்தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் காசா கிராண்ட் கட்டுமான நிறுவனம் ரூ.8 ஆயிரம் கோடி வரை பல்வேறு கால கட்டத்தில் கட்டுமான பணிகளில் முதலீடு செய்துள்ளதாகவும், ஆனால் அதற்கான கணக்குளை வருமான வரித்துறைக்கு முறையாக கணக்கு காட்டாமல் தனது துணை நிறுவனங்கள் பெயரில் கணக்கு காட்டியதற்கான ஆவணங்கள் பல சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பெரிய அளவில் கட்டுமான பணிகள் செய்து வந்தாலும், அதற்கான முறையான கணக்குகளை வருமான வரித்துறைக்கு காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கணக்கில் வராத ஆவணங்கள், ரொக்க பணம், கணினியின் ஹார்ட் டிஸ்க்குள், பென் டிரைவ் உள்ளிட்ட மென் பொருட்கள் பல பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்களாக விடிய விடிய சோதனை நடந்தாலும், பெரிய அளவில் எந்த ஆவணங்களும் சிக்கி வில்லையாம்.
எனினும் இருந்தாலும், எ.வ.வேலுவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நடத்தும் நிறுவனங்களில் இருந்து கணக்கில் வராத பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாட்களாக சோதனை நடத்தி வரும் நிலையில் கட்டுமான நிறுவனங்களில் கிளை நிறுவனங்களில் சோதனை முடிந்துள்ளது. பினாமிகள் பெயரில் உள்ள நிறுவனங்களில் நேற்று இரவு வரை சோதனை நீடித்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.