ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், சூரன்கோட் பகுதியில் கடந்த 21ம் தேதி ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர். இதில் 4 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த 8 பேரை ராணுவத்தினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அடுத்த நாள், ராணுவ காவலில் இருந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி சூரன்கோட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், அவர் நேற்று வலுக்கட்டாயமாக வீட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பிடிபி கட்சி தகவல் தெரிவித்துள்ளது. கட்சியின் டிவிட்டர் பதிவில், ‘‘மெகபூபா முப்தி அநியாயமாக வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டதை பிடிபி கட்சி வன்மையாக கண்டிக்கிறது’’ என கூறப்பட்டுள்ளது.