சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத்துக்காக மதிமுக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வைகோ ரூ.10.20 லட்சம் நிவாரணம் வழங்கினார். டிசம்பர் 3, 4ம் தேதிகளில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கக் கூடிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தன்னார்வலர்கள் தானாக முன்வந்து உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத்துக்காக மதிமுக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வைகோ ரூ.10.20 லட்சம் நிவாரணம் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் கூட ஒன்றிய பாஜக அரசு ஓரவஞ்கமாக செயல்படுகிறது. நாங்கள் கேட்டதில் 15 சதவீதம் நிவாரணம் தான் ஒன்றிய அரசு தந்துள்ளது. முதலமைச்சர் கூறிய நிவாரண நிதியை ஒன்றிய அரசு தர வேண்டும் என்று வலியுறுத்தினார். வெள்ளம் வந்தாலும் மக்கள் ஆதரவு திமுக பக்கம் தான் உள்ளது. அமைச்சர் செல்லும் இடங்களில் எந்த எதிர்ப்பும் இல்லை. வெல்ல நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்கிறது. ஒன்றிய அரசு கொடுப்பதற்கு முன் மாநில அரசு அறிவித்துவிட்டது என்று குறிப்பிட்டார்.