திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மிக்ஜாம் புயல் மழை காரணமாக பெரும் சேதத்தை சந்தித்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் மெல்ல இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது. இருப்பினும் சோழவரத்தை அடுத்த நல்லூர் ஊராட்சியில் தாழ்வான பகுதிகளான அம்பேத்கர் நகர், இந்திரா நகர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் முற்றிலும் மூழ்கடித்துள்ளது.
நூற்றிற்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர் 8 நாட்களாகியும் வடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். எனவே தேங்கியுள்ள மழை நீரை அகற்ற உரிய நபிடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திரா நகர் பகுதியில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியையும் மழை நீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது. தற்போதைய சூழலில் அதிகாரிகள் வந்து பார்த்து விட்டு தண்ணீரை எங்கே வெளியேற்றுவது என்று கேட்டு சென்று விட்டதாகவும் மழைநீரை அப்புறப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.