Sunday, May 12, 2024
Home » மயாமி ஓபன் டென்னிஸ் ஹாலெப்பை வீழ்த்தினார் படோசா

மயாமி ஓபன் டென்னிஸ் ஹாலெப்பை வீழ்த்தினார் படோசா

by Arun Kumar

மயாமி: அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், முன்னாள் நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப்புடன் மோதிய ஸ்பெயின் நட்சத்திரம் பவுலா படோசா 2-1 என்ற செட் கணக்கில் போராடி வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். சுமார் ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டென்னிஸ் களத்துக்கு திரும்பியுள்ள சிமோனா ஹாலெப் (32 வயது), தனது முதல் சவாலில் தரவரிசையில் 80வது இடத்தில் உள்ள படோசா (26 வயது) உடன் மோதினார். படோசாவின் அதிரடி ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிய ஹாலெப் 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார்.

எனினும், 2வது செட்டில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி படோசாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த அவர் 6-4 என வெற்றியை வசப்படுத்து சமநிலை ஏற்பட்டது. 3வது மற்றும் கடைசி செட்டில் சிறப்பாக விளையாடிய படோசா 6-1, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 58 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீராங்கனைகள் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), கேத்தரினா சினியகோவா (செக்.), லாரா சீஜ்மண்ட் (ஜெர்மனி), ஜின்யு வாங், யூ யுவான், ஸுவாய் ஸாங் (சீனா), டெய்லர் டவுண்செண்ட் (அமெரிக்கா), லெசியா சுரெங்கோ (உக்ரைன்), யூலியா புடின்ட்சேவா (கஜகஸ்தான்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதியுடன் களமிறங்கிய அமெரிக்க நட்சத்திரம் வீனஸ் வில்லியம்ஸ் (43 வயது, 457வது ரேங்க்) தனது முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

* சபலென்கா சோகம்:

படோசா தனது 2வது சுற்றில் 2வது ரேங்க் வீராங்கனை அரினா சபலென்காவுடன் மோதுகிறார். சபலென்காவின் காதலரும் பெலாரஸ் ஐஸ் ஹாக்கி அணி வீரருமான கான்ஸ்டான்டின் கோல்ட்ஸோவ், நேற்று முன்தினம் புளோரிடாவில் தங்கியிருந்த சொகுசு ஓட்டலின் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மயாமி ஓபனில் சபலென்கா விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது. எனினும், அவர் தொடர்ந்து களமிறங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் பலரும் சபலென்காவுக்கு ஆறுதல் கூறியுள்ளதுடன் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

5 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi