டெல்லி: எம்.ஜி.ஆர் தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக மக்களால் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர். இலங்கை கண்டி அருகில் உள்ள நாவலபிட்டியில் 1917 ஜனவரி.17ம் தேதி பிறந்தார்.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்பட்டார்.
கடந்த 1977ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். 1987ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் 3 முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார். இந்நிலையில் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாள் விழாவை கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் எம்.ஜி.ஆரின் சிலை, உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் கூறியதாவது, எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை இன்று நினைவு கூர்ந்து கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு தலைவராகவும் இருந்தார். அவரது படங்கள், குறிப்பாக சமூக நீதி மற்றும் பச்சாதாபம், வெள்ளித்திரைக்கு அப்பால் இதயங்களை வென்றன. அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது. என குறிப்பிட்டுள்ளார்.