சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் ஜன.3ம் தேதிவரை குமரிக்கடல் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நேற்று முன்தினம் (டிச.29ம் தேதி) கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு இருந்தால் ஜன.1 மற்றும் 2 ஆகிய நாட்களில் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் நேற்று காலை 8.30 மணியளவில் தென்கிழக்கு அரபிக்கடல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்வதால் தற்போது தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.