புதுடெல்லி: சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்றார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி நேற்று பதவியேற்றார். அவருக்கு மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாநிலங்களவை முன்னவர் பியூஷ் கோயல் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் முன்னிலையில் அவர் பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். இதே போல் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்(ஒடிசா),காங்கிரஸ் தலைவர்களான அஜய் மாக்கன், நசீர் உசைன்(இருவரும் கர்நாடகா), ஆர்.பி.என். சிங்(பாஜ), (உபி),சமிக் பட்டாச்சார்ஜி(பாஜ) ( மேற்கு வங்கம்), சஞ்சய் குமார் ஜா(பீகார்)(ஐக்கிய ஜனதா தளம்),சுபாஷிஷ் குந்தியா,தேபாஷிஷ் சமாந்த்ரே(பிஜேடி) ஆகியோரும் பதவியேற்றனர். இதை தவிர ஒய்எஸ்ஆர் காங்கிரசை சேர்ந்த கொல்லா பாபுராவ்,மேதா ரகுநாத ரெட்டி,ஒய்.வெங்கட சுப்பா ரெட்டி உட்பட 14 பேர் எம்பிக்களாக பதவியேற்றனர்.