தர்மபுரி: தர்மபுரியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ரூ.233 கோடிக்கு முதலீடு திரட்டி வந்துள்ளார். இதன் மூலம் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்காக முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
பாஜ., எம்பி மீதான பாலியல் புகார் குறித்து நடவடிக்கை கோரி, மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக, உலக மல்யுத்த சம்மேளனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம். மாநில அரசின் அனுமதி இல்லாமல், அணை கட்ட முடியாது. ஒன்றிய அரசு 3 அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்துள்ளது. அதை திரும்ப பெற வேண்டும். எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில்தான், வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.