வண்டலூர்: மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் வழுதியமேடு, அருமந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் போக்குவரத்து புலனாய்வில் குழு ஒன்றை அமைத்து சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.
அதன் அடிப்படையில் அருமந்தை பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் சிலர் சாகசத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் 3 பேரை கைது செய்தனர். செங்குன்றம் நாரவாரி குப்பத்தை சேர்ந்த (19) ரமேஷ்பாபு, புழல் கவான்கரை இலங்கை தமிழர் முகமை சேர்ந்த(18) லெனின் ஜான்சன், வழுதியமேடு கிராமத்தை சேர்ந்த (21) தினேஷ் ஆகிய மூவரையும் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சாகசத்திற்காக பயன்படுத்திய 3 இருசக்கர வாகனம், ஓட்டுநர் உரிமம், சாகசத்தை வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்துள்ளனர்.