அண்ணாநகர்: தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஆயிஷாதன்வீர்(40). இவர் சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்ததாகவும் இதனை தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யவேண்டும் என்று அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு நேற்று சென்றுள்ளார். இதன்பின்னர் பதிவு செய்வதற்காக ஆயிஷா கொண்டுவந்திருந்த மருத்துவம் தொடர்பான ஆவணங்களை தமிழ்நாடு மருத்துவர் கவுன்சில் பதிவாளர் காமராஜ், உண்மை தன்மை குறித்து சரிபார்த்தபோது போலியானது என்பது தெரிவந்துள்ளது.
இதுசம்பந்தமாக பதிவாளர் காமராஜ், அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ் என்பவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்த விவரத்தை தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த அரும்பாக்கம் போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். அப்போது ஆயிஷா கூறியதாவது;
எனது சொந்த ஊர் தெலங்கானா. கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தேன். தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யவேண்டும் என்பதற்காக அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மருத்துவ மெடிக்கல் கவுன்சிலில் உள்ள அலுவலகத்துக்கு வந்தேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் மருத்துவப் பலகலைக்கழகத்தில் படித்தாரா என்று விசாரணை செய்தபோது அவர் அங்கு படிக்க வில்லை என்பதும் போலி மருத்துவ சான்றிதழை பதிவு செய்யவந்துள்ளார் என்றும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இவருக்கு போலியான ஆவணங்களை தயாரித்து கொடுத்த கும்பல் யார் என்று கேட்டபோது ஆயிஷா தன்வீர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து ஆயிஷாவை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.