திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள், கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்று ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கின் விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அதில் பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கிரி வீதிகளில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பார்க்கிங் வசதி ஏற்படுத்தித் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வரும் காலங்களில் கிரி வீதிகளில் ஆக்கிரமிப்பு இல்லாத அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிரிவலப் பாதையில் வணிக நிறுவனங்களை முற்றிலும் ஏன் தடுக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், அதிகாரிகள் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை 2 வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.