Wednesday, May 15, 2024
Home » மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி

மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி

by Ranjith

கவுகாத்தி: இந்திய அணியுடனான 3வது டி20 போட்டியில், மேக்ஸ்வெல் அதிரடியால் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. பரஸ்பாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 6 ரன் எடுத்து பெஹரண்டார்ப் பந்துவீச்சில் கீப்பர் வேட் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த இஷான் கிஷன் டக் அவுட்டாகி வெளியேற, இந்தியா 2.3 ஓவரில் 24 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், ருதுராஜ் – கேப்டன் சூரியகுமார் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்தனர். சூரியகுமார் 39 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். திலக் வர்மா பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய ருதுராஜ் 32 பந்தில் அரை சதம், 52 பந்தில் சதம் அடித்து அசத்தினார். மேக்ஸ்வெல் வீசிய கடைசி ஓவரில் ருதுராஜ் 2 பவுண்டரி, 3 சிக்சர்களை பறக்கவிட… இந்தியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன் குவித்தது. அந்த ஓவரில் மட்டும் 30 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

முதல் 10 ஓவரில் 80 ரன் எடுத்திருந்த இந்தியா, அடுத்த 10 ஓவரில் ருதுராஜின் ருத்ரதாண்டவத்தால் 142 ரன்களை சேர்த்து மிரட்டியது. ருதுராஜ் 123 ரன் (57 பந்து, 13 பவுண்டரி, 7 சிக்சர்), திலக் வர்மா 31 ரன்னுடன் (24 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 223 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஹெட், ஹார்டி இணைந்து துரத்தலை தொடங்கினர். ஹார்டி 16, ஹெட் 35 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இங்லிஸ் 10 ரன்னில் வெளியேறினார்.

மேக்ஸ்வெல் – ஸ்டாய்னிஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த போராடியது. 10 ஓவர் முடிவில் ஆஸி. 3 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்திருந்தது. ஸ்டாய்னிஸ் 17 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த டிம் டேவிட் டக் அவுட்டானது ஆஸி.க்கு நெருக்கடியை அதிகரித்தது. எனினும், மேக்ஸ்வெல் 28 பந்தில் அரை சதம் அடித்து அந்த அணிக்கு நம்பிக்கை தந்தார். கடைசி 5 ஓவரில் ஆஸி. வெற்றிக்கு 78 ரன் தேவைப்பட்ட நிலையில், மேக்ஸ்வெல் வழக்கம்போல சிக்சர்களாகத் தூக்கி மிரட்ட, ஆட்டம் பரபரப்பானது.

பிரசித் வீசிய கடைசி ஓவரில் 21 தேவை என்ற நிலையில், மேக்ஸ்வெல் அதை சாதித்துக் காட்டினார். ஆஸி. 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 104 ரன் (48 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்), வேட் 28 ரன்னுடன் (16 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் பிஷ்னோய் 2, அர்ஷ்தீப், ஆவேஷ், அக்சர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 2-1 என முன்னிலை வகிக்க, 4வது போட்டி ராய்பூரில் நாளை மறுநாள் நடக்கிறது.

You may also like

Leave a Comment

4 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi