பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தின் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலுக்கு அருகே ஷாஹி இத்கா மசூதி அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த மசூதி கத்ரா கேசவ் தேவ் என்ற இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டது என இந்து மத அமைப்பினர் தெரிவித்து வருகின்றனர். 13.37 ஏக்கர் பரப்பளவில் உள்ள மசூதி வளாகம் முழுவதையும் இந்து தரப்பினர் உரிமை கோரி வருகின்றனர்.
இதுதொடர்பான வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று இந்து தரப்பினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மசூதி வளாகத்தில் இந்து கோயில்களின் தாமரை வடிவ தூண் உள்ளது. இந்து தெய்வமான ஷேஷ்நாக படமும் அங்குள்ளது. தூணின் அடிப்பகுதியில் இந்து மத சின்னங்கள், வேலைப்பாடுகள் காணப்படுகின்றன” என்று தெரிவித்தார். இதையடுத்து ஷாஹி இத்கா மசூதி வளாகத்தை நீதிமன்ற கண்காணிப்பில் ஆய்வு செய்ய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.