Wednesday, May 8, 2024
Home » மார்த்தாண்டம் அருகே பரபரப்பு; பழைய கார் விற்பனை கடையில் 2 சொகுசு கார்கள் திருட்டு; ஒரே நாள் இரவில் 3 கடைகளில் கைவரிசை

மார்த்தாண்டம் அருகே பரபரப்பு; பழைய கார் விற்பனை கடையில் 2 சொகுசு கார்கள் திருட்டு; ஒரே நாள் இரவில் 3 கடைகளில் கைவரிசை

by Suresh

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் அருகே பழைய கார் விற்பனை கடையில் 2 சொகுசு கார்களை கொள்ளையர்கள் திருடி சென்றுவிட்டனர். அதே பகுதியில் மேலும் 2 கடைகளிலும் திருடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு பகுதியை சேர்ந்தவர் சிவ நிவாஸ் (48). அதே பகுதியில் பல ஆண்டுகளாக பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மீண்டும் நேற்று காலை சுமார் 8 மணியளவில் கடையை திறக்க வந்தார்.

அப்போது கடையின் செட் போன்ற அடைப்பு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த 2 சொகுசு கார்களை காணவில்லை. கடையில் சிசிடிவி காமிரா பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால் அந்த காட்சிகள் பதிவாகும் டிவிஆர் பாக்சையும் காணவில்லை. இதுகுறித்து அவர் உடனே மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில், இரவில் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த ஒவ்வொரு சாவியாக போட்டு கார்களை இயக்க முயற்சித்து உள்ளனர். அப்போது 2 கார்கள் ஸ்டார்ட் ஆகிவிட்டதால் அந்த கார்களை அப்படியே எடுத்து சென்றுவிட்டனர்.

மேலும் சிசிடிவியில் தங்களின் உருவம் பதிவாகியிருக்கும் என்பதால், டிவிஆர் பாக்சையும் உடன் எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது. இதேபோல் அந்த கடையில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் சிராயன்குழி பகுதியில் மற்றொரு பழைய கார்கள் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்து அங்கு பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம், சிசிடிவி காட்சிகள் பதிவாகும் டிவிஆர் பாக்ஸ் ஆகியவற்றை திருடியுள்ளனர். இருப்பினும் அங்கிருந்த சாவிகள் எந்தவொரு காருக்கும் சரிவரவில்லை என்பதால் அங்கிருந்து கார்களை திருட முடியாமல் ஏமாந்து போயுள்ளனர். மேலும் சாங்கை என்ற பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பழைய கார்கள் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்து பணம் இருக்கிறதா? என தேடி உள்ளனர். ஆனால் கிடைக்காததால் அங்கிருந்த சிசிடிவி காமிரா காட்சி பதிவாகும் டிவிஆர் பாக்சை திருடிவிட்டு தப்பியுள்ளனர்.

போலீசார் அருகில் உள்ள மற்ற கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் நெல்லை மாவட்ட பதிவெண் கொண்ட காரில் 5 பேர் கும்பல் வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. எனவே அந்த கும்பல்தான் 3 கடைகளிலும் திருடியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து விசாரித்தபோது, அந்த கும்பல் பயணித்த கார் வள்ளியூரில் திருட்டு போன கார் என்பதும், அங்குள்ள காவல் நிலையத்தில் அதன் உரிமையாளர் புகார் அளித்திருப்பதும் தெரியவந்தது. அதேபோல் காரில் பயணித்த கும்பல் மதுரையை சேர்ந்தவர்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர். ஒரே பகுதியில் ஒரே நாளில் கார்கள் மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

9 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi