சென்னை : மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசித்து வந்தார். அவருக்கு சளி தொந்தரவு, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று (நவ.15) பிரிந்தது.
பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த சங்கரய்யா,வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, 95 வயதிலும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக போராடியவர் ஆவார். இந்த நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சங்கரய்யா உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.சங்கரய்யாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக முதலில் குரோம்பேட்டை இல்லத்திலும் பின்னர் தி.நகர் கட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட உள்ளது. சங்கரய்யாவின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.