ராய்காட்: மராட்டிய மாநிலம் ராய்காட்டில் நிலச்சரிவில் சிக்கி 84 பேரும் உயிரிழந்ததாக அறிவித்த பேரிடர் மீட்பு படையினர், மண்ணில் புதையுண்ட எஞ்சியோர் உடல்களை மீட்கும் பணிகளையும் கைவிட்டனர். மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதித்துள்ளனர். சாலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சாலை போக்குவரத்து, ரயில் சேவை முடங்கியுள்ளது. இதனிடையே, இரிசல்வாடி என்ற கிராமத்தில் கடந்த புதன்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் பலரும் மண்ணில் புதைந்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். பலத்த மழைக்கு இடையே அவர்கள் மீட்பு பணியை தொடர்ந்தனர். 27 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், 57 பேரை தேடும் பணி தொடர்ந்தது. அப்பகுதியில் மொத்தம் இருந்த 48 வீடுகளில் 17 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்நிலையில் காணாமல் போன 54 பேரும் உயிரிழந்ததாக பேரிடர் மீட்பு படையினர் அறிவித்துள்ளனர். மேலும் நேற்று எந்த உடலையும் கண்டெடுக்க முடியாததால் மீட்பு பணியையும் கைவிட்டனர்.