சேலம்: சேலம் ஆர்பிஎப் போலீசார் நேற்று முன்தினம் மாலை வந்த புதுடெல்லி-திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் (12626) ரயிலில் ஏறி ஓவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தி வந்தனர். அப்போது பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பேக்கை எடுத்து போலீசார் சோதனையிட்டனர். அதனுள் மெகா சைஸ் மண்ணுளி பாம்பு இருந்தது. அதனை மோசடி கும்பல், கேரளாவிற்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.
உடனே அந்த மண்ணுளி பாம்பை கைப்பற்றி, கடத்தி வந்த நபர்களை அறிய அப்பெட்டியில் இருந்த பயணிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், போலீசார் சோதனை நடத்தி வருவதை பார்த்த மோசடி கும்பல், அந்த பேக்கை கழிவறை அருகே போட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சிக்கிய மண்ணுளி பாம்பை கோவை ஆர்பிஎப் போலீசில் ஒப்படைத்தனர். அந்த பாம்பு 4.2 அடி நீளத்தில் 5 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த பாம்பை கேரளாவிற்கு கொண்டு சென்று ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை செய்ய மோசடி கும்பல் திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.