மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மூவாநல்லூர் அண்ணா நகரை சேர்ந்தவர் லிங்குசாமி. இவரது மனைவி ஜனனி(26). இவர் நேற்றுமுன்தினம் மன்னார்குடி பெரிய கடைத்தெருவில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றார். அப்போது ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாமல் தடுமாறிய அவரை அங்கு இருந்த மர்ம நபர் அணுகினார். தான் பணம் எடுத்து தருவதாக கூறி ஏடிஎம் கார்டை வாங்கிய அந்த நபர் பின் நம்பரையும் கேட்டு தெரிந்து கொண்டார்.
பின்னர் ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவது போல் நடித்த அவர் சிறிது நேரம் கழித்து பணம் வரவில்லை என கூறி ஜனனியிடம் வேறு கார்டை மாற்றி கொடுத்தார். அந்த கார்டை அதே பகுதியில் உள்ள வேறு ஒரு ஏடிஎம்மில் ஜனனி போட்டு பார்த்தார். அப்போது பின் நம்பர் தவறானது என தெரிய வந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு சென்று விசாரித்தார். அப்போது அரை மணி நேரத்திற்கு முன் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.20,000 எடுக்கப்பட்டது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து ஏடிஎம் பரிவர்த்தனையை முடக்கிய ஜனனி இது குறித்து மன்னார்குடி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் ஜனனியிடம் மோசடி செய்தது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த டேவிட் கலைவாணன்(57) என தெரிய வந்தது.
விசாரணையில் அங்கு சொந்தமாக ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வரும் அவர் ஊர் ஊராக சென்று இது போல் ஏடிஎம்களில் பெண்கள், வயதானவர்களை ஏமாற்றி பணம் மோசடி செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் நேற்று மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மன்னார்குடி கிளை சிறையில் அடைத்தனர்.