ஸ்ரீநகர்: மன்மோகன்சிங் ஒரு உண்மையான அரசியல்வாதி. பிரதமர் மோடி அவரது பாதைகளை பின்பற்ற வேண்டும் என்று உமர்அப்துல்லா தெரிவித்தார். காஷ்மீரில் உள்ள வடக்கு காஷ்மீர் பாரமுல்லா தொகுதியில் போட்டியிடும் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு அதன் கீழ் உள்ள விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அமலாக்க இயக்குனரகத்தால் விசாரிக்கப்படும் அல்லது குற்றஞ்சாட்டப்படும் வழக்குகளில் 95 சதவிகிதம் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக உள்ளது.
ஒரு கட்டத்தில், பிரதமர் அவருடைய பாரம்பரியத்தைப் பார்க்கத் தொடங்குவார். ஜவஹர்லால் நேருவை விட நீண்ட காலம் பிரதமராக இருப்பதே அவரது நோக்கம் என்று நான் நினைக்கிறேன். அந்த இலக்கை அடைந்தவுடன், நாம் யாரும் இளமையாகிவிட மாட்டோம். வயது முதிர்ந்து வெளியேற வேண்டிய தருணம் வரும். அப்போது அவர் எந்த வகையான மரபை விட்டுச் செல்ல விரும்புகிறார் என்பதைப் பற்றி அவரது மனதில் எங்காவது சிந்திக்கத் தொடங்குவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மன்மோகன்சிங் மிகவும் வெற்றிகரமான பிரதமர்களில் ஒருவராக இருந்தார். அவர் உண்மையிலேயே ஒரு கண்ணியமான அரசியல்வாதி. இன்று மோடியிடம் என்ன இருக்கிறது?. இவ்வாறு கேள்வி எழுப்பினார்.