டெல்லி: மணிப்பூர் வன்முறை தொடர்பாக டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு, மெய்டி – கூகி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மாநிலம் முழுதும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வீடுகள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. வன்முறை நிகழ்வுகள் இன்னும் தொடர்ந்தபடி உள்ளன. இதுவரையில் இந்த வன்முறையில் 100-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.
மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர்களும் காயம் அடைந்துள்ளனர். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நேரடியாக மணிப்பூர் சென்று அமைதி முயற்சி மேற்கொண்டார். இந்நிலையில், மணிப்பூர் வன்முறை தொடர்பாக டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 2 மாதங்களாக மணிப்பூரில் நடந்து வரும் வன்முறையால் பதற்றம் நீடிக்கும் அமெரிக்க – எகிப்து பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பியுள்ள பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்து வருகிறார். முன்னதாக நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் மாநில முதல்வர் பைரேன்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது மணிப்பூர் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வது தொடர்பான தனது கவலையை பைரேன் சிங்கிடம் அமித்ஷா பகிர்ந்து கொண்டார் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவித்துள்ளன.