டெல்லி: மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரித்து நீதிபதிகள் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரித்து நிவாரணம், மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற 3 நீதிபதிகளான கீதா மிட்டல், ஷாலினி ஷோஷி, ஆஷா மேனன் ஆகியோரை கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் கடந்த 7ம் தேதி அமைத்து உத்தரவு பிறப்பித்தது.
மேலும் சிபிஐ விசாரித்து வரும் 12 பாலியல் வன்முறை வழக்குகளை கண்காணிக்கவும், 6,500 வழக்குகளை விசாரிக்க மணிப்பூர் அரசு அமைத்துள்ள 42 எஸ்.ஐ.டி. குழுக்களின் விசாரணையை கண்காணிக்கவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவத்தில் உடந்தையாக இருந்த காவல்துறையினரை விசாரிக்கவும், மகாராஷ்டிரா முன்னாள் டிஜிபி-யை நியமித்து உத்தரவிட்டது. இந்த இரு குழுக்களும் 2 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை மேற்படி விசாரித்து உத்தரவுகளை பிறப்பிக்க அக்டோபர் 13ம் தேதி விசாரணை மீண்டும் நடைபெறும் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரித்து தற்போது அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரணம், மறுவாய்வு நடவடிக்கைகள் குறித்த விரிவான 3 அறிக்கைகளை ஓய்வு பெற்ற பெண் நீதிபதிகள் அடங்கிய குழு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் என்ற தகவலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு உதவுமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை தலைமை நீதிபதி அமர்வு கேட்டுக்கொண்டது.