சூரசந்த்பூர்: சூரசந்த்பூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து I.N.D.I.A. குழு ஆறுதல் தெரிவித்தது. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அங்கு 2 மாதத்திற்கும் மேலாக கலவரம் நீடிக்கிறது. இதில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் மணிப்பூரில் நிலவும் உண்மை நிலையை ஆராய எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A.கூட்டணி சார்பில் 21 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழு மணிப்பூர் சென்றிருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து திமுக எம்.பி.கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன், எம்.பி.ரவிக்குமார் ஆகியோர் அந்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். பிற்பகல் இம்பால் சென்றடைந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 2 குழுக்களாக பிரிந்து சூரசந்த்பூருக்கு பயணித்தனர்.
அங்கு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள குக்கி பழங்குடியின சமூக தலைவர்கள், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்கள் குழுக்களை அவர்கள் சந்தித்து பேசினர். செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பது தங்கள் கடமை என்று தெரிவித்தனர். முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம் பேசி அவர்களது உணர்வுகளை அறிந்தோம். மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர்களுக்கு நம்பிக்கை அளித்தோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.